ஜவஹர்லால் நேரு முதல் தற்போதைய காங்கிரஸ் தலைமை வரை, தொடர்ந்து வந்தே மாதரத்தை எதிர்ப்பதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார். சுதந்திரம்பெற வந்தே மாதரம் பாடலைப் பாடி சிறை சென்றவர்கள் காங்கிரஸார் என மல்லிகார்ஜூன கார்கே பதில் அளித்துள்ளார்.
வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில், மாநிலங்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடந்து வருகிறது. இதில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வந்தே மாதரம் 100 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸ், தேசிய பக்திப் பாடலை போற்றுவதற்கான வாய்ப்பை தடுத்தது என்றார்.
மக்களவையில் நேற்று வந்தேமாதரம் விவாதம் நடைபெற்றபோது, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் அவையில் இல்லை. வந்தே மாதரத்தை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கிறது என்றும் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்தியாவின் சுதந்திரத்திற்காக வந்தே மாதரம் என்ற கோஷங்களுடன் காங்கிரஸார் சிறை சென்றதாகவும், அப்போது பிஜேபி-யினர் எங்கே சென்றிருந்தனர் என்றும் கேள்வி எழுப்பினார்.





















