இயற்கை விவசாயிகள் மாநாட்டினை துவங்கிவைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகிறார். இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடீசியா அரங்கில், நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி,
தென் மாநிலங்களைச் சேர்ந்த 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நாளை ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து பிற்பகல் 1-30 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கொடீசியா அரங்கத்திற்கு செல்லும் பிரதமருக்கு, தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பிலும், பிஜேபி சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகல் 3-30 மணிக்கு பிரதமர் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் மாநாடு நடக்கும் கொடிசியா வளாகம் முழுவதும், இந்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.பிரதமரை வரவேற்பதற்காக 50 ஆயிரம் பேர் கூட இருப்பதாக பி.ஜே.பி. தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். வரவேற்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர், பிரதமரின் நிகழ்ச்சியை முதலமைச்சர் புறக்கணிப்பது நெறிமுறைகளுக்கு முரணாது என்றார்.



















