இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக்கப்படும் தகவல் வெளியாகி இருந்த நிலையில். அதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
தற்போது, இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தை இயக்கிய எம். ராவத் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘கலாம்: தி மிஸ்ஸைல் மேன் ஆஃப் இந்தியா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமூக ஆர்வலர் RTI செல்வம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தில் (CBFC) புகார் மனுவொன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
“அப்துல் கலாம் அவர்கள், இந்தியாவின் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் வழிகாட்டி. அவரின் பெயர், மதிப்பும் மரியாதையும் மிக்கதொரு சின்னமாக இருக்கிறது. அந்த நற்பெயரை, சினிமாவை அடிப்படையாகக் கொண்டு தவறாகப் பயன்படுத்தக் கூடாது. சமீப காலமாகத் திரைப்படங்களில் சமூக தலைவர்கள், அரசியல் நாயகர்கள், வரலாற்றுப் பிரபலங்கள் போன்றோரின் பெயர்கள், கதாபாத்திரங்கள் வெறுப்புணர்வோடும் அல்லது தவறான விதத்தில் சித்தரிக்கப்படுகின்றன.”
“இந்தச் சூழலில் அப்துல் கலாம் ஐயா அவர்களின் பெயரைப் பயன்படுத்தும் படத்திற்கு முன்கூட்டியே தடைவிதிக்க வேண்டும். காரணம், அந்தப் படத்தில் சில காட்சிகள் அவரது மரியாதையை குறைக்கும் வகையில் இருந்தால், அது அவரின் பாரம்பரியத்தையே கெடுக்கும். இப்படியான சூழலில் அனுமதி அளிக்கப்பட வேண்டாம்”, என்று கூறியுள்ளார்.
மேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் பிரசுர சட்டங்களின் அடிப்படையில், இப்படம் இணையதளத்தில் அல்லது சமூக ஊடகங்களில் வெளியாவதற்கு தடையிருப்பதாகவும், தலைவரின் பெயர் தவறாகச் சித்தரிக்கப்படுவதை எதிர்க்கும் வகையிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனுடன், புகார் மனுவில் “தனுஷ் மற்றும் இயக்குநர் எம். ராவத் மீது எதிர்காலத்தில் மானநஷ்டத்தினை கோரி வழக்கு தொடரவும் முழுமையான ஆதாரமாகவும் இந்த மனு அமையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளத
அப்துல் கலாம் போன்ற பாராட்டப்படும் தலைவரின் பெயரைப் பயன்படுத்துவது, பலரிடையே பெருமையை உண்டாக்கும் என ஒரு பக்கம் கூறினாலும், அதைத் தவறாக விளக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சமூக ஒழுங்கைக் காக்கும் நோக்கில் சிலர் கடும் எதிர்ப்புகளையும், தெரிவித்து வருகின்றனர்.
இத்திரைப்படம் உருவாகுமா? அல்லது பெயரிலேயே தடையாகுமா என்பதை நாடாளுமன்றம் மற்றும் சினிமா தணிக்கை வாரியத்தின் முடிவுகள் வரையறுக்கும்.