லண்டனில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் சின்னத்துறை மீனவ கிராமங்களை சேர்ந்த ஏழை பெண்களிடம் பண மோசடி
கன்னியாக்குமாரி, தூத்தூர் அருகே சின்னத்துறை கே.ஆர் புரம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற வாலிபர் M.B.A படித்து முடித்து விட்டு MSc படித்துள்ள பெண்ணை திருமணம் செய்துகொண்டு இருவரும் சேர்ந்து வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய வேண்டி பல கன்ஸல்டன்சிகளை நாடி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2023 ம் ஆண்டு நண்பர் ஒருவர் உதவியுடன் கோயம்புத்தூரை சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண் ஒருவரின் தொடர்பு கிடைத்து. அவர் லண்டனில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருவதாகவும் படித்து முடித்து லண்டனில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும் தெரிந்து நிஷாந்த் மற்றும் அவருடைய மனைவிக்கும் லண்டன் செல்ல வேண்டி தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.
அப்போது வாட்சாப் காலில் வந்த ஜெயபாரதி இங்கு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வேலை வாய்ப்பு உள்ளதாகவும் ஒன்றிரண்டு காலி இடங்கள் உள்ளதாவும் ஏராளமானோர் அதற்கு பதிவு செய்துள்ளதாவும் யார் முதலில் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதற்கு 20 இலட்சம் வரை ஆகும் என்றும், பணத்தை கொடுத்து வேலையில் சேர்ந்தால் மாதம் 3 முதல் 5 இலட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.
மேலும் நீங்கள் செலுத்தும் பணம் முழுவதும் வங்கி மூலமாகத்தான் வழங்க வேண்டும் அப்படி என்றால் தான் அது உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று நம்ப வைத்துள்ளார். அவரின் ஆசை வார்த்தைகளுக்கு நம்பிய நிஷாந்த் வட்டிக்கு கடன் வழங்குபவர்களிடம் இருந்தும் கடன் வாங்கி அவர் கொடுத்த வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார் .பணம் முழுவதும் வாங்கிய பின் ஜெயபாரதி மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவ்வப்போது தொடர்பு கொண்டு விசா ரெடியாகி விட்டது இன்னும் சில நாட்களில் நீங்கள் இங்கு வரலாம் என்று நம்ப வைத்துள்ளனர்.
பணம் கொடுத்து மாதங்கள் பல கடந்தும் வேலைக்கு செல்வதற்க்கான எந்த அறிவிப்பும் வராமல் காலதாமதம் ஆனதால் நிஷாந்திற்கு கடன் கொடுத்தவர்கள் அவரை தொந்தரவு செய்ய தொடங்கியதால், அவர் ஜெயபாரதியை தொடர்பு கொள்ள முயலும் போது அவ்வப்போது அவரது எண் சுவிட்ச் ஆப் ஆகியும் சில நேரங்களில் முறையாக பதில் அளிக்காமலும் அலைக்கழித்து உள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிஷாந்த் அவரை தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு பேசியபோது இங்கு சில பிரச்சனைகள் இருப்பதால் இப்போது உங்களை இங்கே எடுக்க முடியாது ஆகையால் உங்களது பணத்தை திருப்பி தரலாம் என்று கூறி இரண்டு வருடங்கள் கடந்த பின்பும் இதுவரை பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார்.
இதனால் விரக்தியடைந்த நிஷாந்த், ஜெயபாரதி கொடுத்த கோயம்புத்தூர் முகவரிக்கு தேடி சென்றுள்ளார். அங்கே ஜெயபாரதிக்கு பதிலாக வேறொரு குடும்பம் அங்கே இருந்துள்ளது. மேலும் அது வாடகை வீடு என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை பற்றி அங்கே விசாரித்தபோது அவர் இதேபோன்று கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்த நிஷாந்த் ஜெயபாரதி குறித்து புகார் கொடுக்க முயன்றபோது தான் தங்களது ஊர் மற்றும் பக்கத்து ஊரை சேர்ந்த 7 குடும்பத்தினரிடம் இருந்தும் தலா 5 லட்சம் முதல் 20 இலட்சம் வரை சுமார் ஒரு கோடி ருபாய் வரை மோசடி செய்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 7 பேரும் ஒன்று சேர்ந்து தங்களை நம்ப வைத்து மோசடி செய்து ஏமாற்றிய ஜெயபாரதி அவரது கணவர், தோழி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டு தரக்கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கண்ணீர் மல்க மனு கொடுத்துள்ளனர்.


















