சென்னை முகப்பேரில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
முகப்பேர் பகுதியில் செயல்பட்டு வரும் வங்கிக் கிளைக்கு தொலைபேசியில் பேசிய நபர் ஒருவர், வங்கியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து, 4 முறை இதேபோன்று தொலைபேசியில் அந்த நபர் பேசியதால், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டு, காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக, மோப்பநாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள், வங்கி முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில் அந்த தகவல் புரளி என தெரியவந்தது. இதுபற்றி, கொரட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வங்கி ஊழியர் ஒருவரே தனது நண்பர் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


















