கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளயானி பகுதியில் நேமம் கூட்டுறவு சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த 2015 முதல் 2025வரையிலான கால அளவில் பொதுமக்கள், விவசாயிகள் என 420 பேர் செலுத்திய சேமிப்பு மற்றும் வைப்பு தொகையான சுமார் 96கோடி ரூபாயில் முறைகேடு நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில் கூட்டுறவு சங்கத்தில் செலுத்திய சேமிப்பு பணத்தை நம்பியதால் திருமணங்கள் தடைபட்டும், பலர் நோய்வாய்பட்டு சிகிட்சைக்கு கூட பணமில்லாத நிலையில் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து பணத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்தநிலையில் கூட்டுறது சங்க முறைகேடு குறித்து மாநில கூட்டுறவு துறை விசாரணையில் ஈடுபட்டு முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை பணிஇடைநீக்கம் செய்தது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த முறைகேடு குறித்து விசாரிக்க மத்திய பொருளாதார குற்றப்பிரிவினர் இன்று துணை இராணுவத்தினர் உதவியுடன் நேமம் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்து, அலுவலகத்திலுள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர்.இதில் முறைகேடுகள் குறித்து பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று சங்க நிர்வாகிகள் வீடுகளிலும் பொருளாதார குற்றபிரிவினர் சோதனையில் ஈடுபடவுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






















