நேஷனல் ஹெரால்டு வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து, மத்திய அமைப்புகளை பிஜேபி அரசு தவறாகப் பயன்படுத்துவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் 5 பேர் மீது தொடரப்பட்டுள்ள 2 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை தனது எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இதுபோன்ற வழக்குகள், எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லாமல், அரசியல் போட்டியாளர்களைத் துன்புறுத்துவதற்கும், அவமானப்படுத்துவதற்கும் மட்டுமே தொடரப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி பக்கம் உண்மை இருக்கிறது.மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளில் உறுதியாக நின்றதற்காக, காந்தி குடும்பத்தை வேட்டையாடுவதில் பிஜேபி உறுதியாக இருந்தாலும், அதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீண்டும் மீண்டும், இந்த பழிவாங்கும் அணுகுமுறை, முதன்மையான புலனாய்வு நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் கெடுத்து, அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாகக், குறைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.






















