பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக குடியிருப்பதற்கு வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தில் உயிரிழந்த தந்தை கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்ய முடியாமல், வீடு வீடாக சென்று பண உதவி கோரிய அவரது 4 குழந்தைகளுக்கும் அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.
அதன்படி, மறைந்த கமலக்கண்ணனின் 4 பிள்ளைகளையும் இன்று சென்னை அழைத்த முதலமைச்சர், மூத்த மகள் லாவண்யாவிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டுதவற்கான ஒதுக்கீடு ஆணை, சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளருக்கான பணி நியமன ஆணை ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
மகள் ரிஷிகா மற்றும் மகன் அப்னேஷ் ஆகியோருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் தலா 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள், மற்றொரு மகள் ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஆகியவற்றையும் ஸ்டாலின் வழங்கினார்.



















