டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சதிகாரர்கள், நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என, பிரதமர் நரேந்திரமோடி கூறி இருக்கிறார்.
2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு, பிரதமர் நரேந்திரமோடி சென்றுள்ளார். திம்பு விமான நிலையத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, விமான நிலையத்திற்கு நேரில் வரவேற்றார்.
பின்னர், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இரவு முழுவதும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
இந்த கோழைத்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு, சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும், சதிகாரர்கள் தப்ப முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சதித்திட்டத்தின் ஆணிவேர் வரை சென்று, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் கூறினார்.
இதற்கிடையே, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், அவரது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் மற்றும் டெல்லி காவல் ஆணையர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



















