தமிழகத்தை போன்று புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிப்பதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பின்னர், முதன் முறையாக புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாட்டை போன்று புதுச்சேரி மக்களுக்காகவும் தாம் குரல் கொடுப்பேன் என்றார். எம்.ஜி.ஆர் 1977ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பே, 1974ல் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தார். அதுபோல, தமிழக மக்களுக்கு ரோல் மாடலாக இருந்த புதுவை மக்களை மறக்க முடியுமா என்றும் விஜய் குறிப்பிட்டார்.
தமிழக திமுக ஆட்சியை போல புதுவை ஆட்சியாளர்கள் கிடையாது எனக்கூறிய விஜய், மாற்றுக்கட்சி நிகழ்ச்சி என்றாலும், சிறப்பான பாதுகாப்பை அளித்த காவல்துறைக்கும், புதுச்சேரி முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
பிஜேபி கூட்டணியில் இருந்தபோதும், தமிழகத்தை போன்று புதுச்சேரி அரசையும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய விஜய், மாநில அந்தஸ்து கோரி பலமுறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோதும், அதை கண்டுகொள்ளவில்லை என்றும் விமர்சித்தார்.
விஜய் பேசிய நேரலையை, ஆரோவில் பகுதியிலுள்ள டீக்கடையில் அமர்ந்தபடி, முதலமைச்சர் ரங்கசாமி தனது மொபைல் போனில் கேட்டு ரசித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, சிவகங்கை மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் பிரபு, அவருடைய உதவியாளர் டேவிட் ஆகியோர், பொதுக்கூட்டம் நடத்தும் இடத்திற்கு வருகை தந்தனர். அவர்களை போலீஸார் சோதனை செய்தபோது, டேவிட்டிடம் கைத்துப்பாக்கி இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. துப்பாக்கிக்கு முறையான உரிமம் இருக்கிறதா? என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



















